“இ-20 பெட்ரோல் திட்டம் ஒரு பரிசோதனை முயற்சியல்ல; அது அரசின் உறுதியான கொள்கை முடிவு” - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அதிரடி விளக்கம்!
புதுடெல்லி: பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலைக் கலக்கும் 'இ-20' (E20) திட்டமானது ஒரு தொடர் பரிசோதனை முயற்சியாகவே உள்ளது என்றும், இதன் முழுமையான தாக்கம் அடுத்த ஆண்டுக்குள் தெளிவாகத் தெரியும் என்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சகம் (PIB) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், "இ-20 எத்தனால் கலப்புத் திட்டம் எவ்விதத்திலும் ஒரு சோதனை முயற்சி அல்ல; அது நாட்டின் முக்கியக் கொள்கை முடிவு" என்று தெளிவுபடுத்தியுள்ளது.
வழக்கு பின்னணியும் அட்டர்னி ஜெனரல் வாதமும்:
கர்நாடக உயர் நீதிமன்றம் எத்தனால் ஒதுக்கீடு தொடர்பாகப் பிறப்பித்த உத்தரவு ஒன்றை எதிர்த்து, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (BPCL) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, தற்போதைய எத்தனால் ஒதுக்கீட்டு நடைமுறையில் 'யதாஸ்திதி' (Status Quo) அதாவது தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, "எத்தனால் விநியோகத்திற்கான ஒப்பந்தங்கள் மற்றும் ஒதுக்கீடுகள் கடந்த 2025 அக்டோபரிலேயே 378 விநியோகஸ்தர்களுடன் இறுதி செய்யப்பட்டுவிட்டன. மொத்தமுள்ள 1,050 கோடி லிட்டரில், நடப்பு ஜூன் மாதத்திற்குள் 680 கோடி லிட்டர் எத்தனால் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய சூழலில் தனிப்பட்ட சில நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று எத்தனால் ஒதுக்கீட்டை மாற்றியமைத்தால், அது ஒட்டுமொத்த தேசியக் கொள்கையையும், நாட்டின் விநியோகச் சங்கிலியையும் (Supply Chain) கடுமையாகப் பாதிக்கும். மேலும், இதுதொடர்பான பல்வேறு வழக்குகள் நாட்டின் வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதால், அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற (Transfer Petition) நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று வாதாடினார்.
அதைத் தொடர்ந்து, 20 சதவீத எத்தனால் கலப்பு என்பது அரசின் மாறாத கொள்கை முடிவு என்றும், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எத்தனால் அளவு மட்டுமே தேவையைப் பொறுத்து மாறுபடும் என்றும் அவர் பின்னர் தெளிவுபடுத்தினார்.
வாகனக் கோளாறு புகார்களுக்கு முற்றுப்புள்ளி:
இதற்கிடையில், எத்தனால் கலப்பு அதிகரிப்பதால் பழைய வாகனங்களின் எஞ்சின்கள் பாதிக்கப்படலாம் மற்றும் மைலேஜ் குறையலாம் என்ற அச்சங்கள் பரவலாக எழுந்துள்ள சூழலில், மத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இ-20 எரிபொருள் முற்றிலும் பாதுகாப்பானது, அறிவியல் பூர்வமாகச் சரிபார்க்கப்பட்டது மற்றும் நுகர்வோருக்கு உகந்தது என்று கூறியுள்ள மத்திய அரசு, எத்தனால் கலப்பால் வாகனங்களுக்கு இயந்திரக் கோளாறுகள் ஏற்படுவதாகவோ அல்லது வாகனக் காப்பீடு (Vehicle Insurance) ரத்தாகும் என்றோ பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், அதற்கு முறையான ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
₹1.4 லட்சம் கோடி அந்நியச் செலாவணி சேமிப்பு:
அமெரிக்கா, பிரேசில், ஜப்பான் போன்ற சர்வதேச நாடுகளைப் போல இந்தியாவிலும் இந்த எத்தனால் கலப்புத் திட்டம் மிக வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு குறிப்பிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி பெருமளவு குறைக்கப்பட்டு, இதுவரை 1.4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அன்னியச் செலாவணி (Foreign Exchange) நாட்டிற்குச் சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டிலேயே, தாங்கள் நிர்ணயித்திருந்த இலக்கிற்கு ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே இந்தியா 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை எட்டியுள்ள நிலையில், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் இந்த எத்தனால் கலப்பு அளவை 30 சதவீதமாக (E30) உயர்த்த மத்திய அரசு புதிய இலக்கு நிர்ணயித்துத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.


AthibAn Tv