“ஜூலை 20-ல் வெளியாகிறது நீட் மறுதேர்வு முடிவு!”: தேசிய தேர்வுகள் முகமை (NTA) அதிரடி அறிவிப்பு!
புதுடெல்லி: நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (MBBS/BDS) நீட் மறுதேர்வு முடிவுகள் வரும் ஜூலை 20-ம் தேதி வெளியிடப்படும் எனத் தேசிய தேர்வுகள் முகமை (NTA) அதிகாரப்பூர்வமாகத் திட்டமிட்டுள்ளது. நடப்பு 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ம் தேதி நடத்தப்பட்டது. ஆனால், இந்தத் தேர்வின் போது நாடு தழுவிய அளவில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒட்டுமொத்தத் தேர்வையும் மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும், இந்த வினாத்தாள் கசிவு மோசடிக்குக் காரணமானவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்ட நிலையில், நீட் தேர்வு மீண்டும் ஒருமுறை புதிய பாதுகாப்புகளுடன் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு மற்றும் கடுமையான கண்காணிப்பு வளையத்திற்கு மத்தியில் ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெற்றது. இந்திய அளவில் 551 முக்கிய நகரங்கள் மட்டுமன்றி, சர்வதேச அளவில் துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், சிங்கப்பூர் உள்ளிட்ட 14 வெளிநாடுகளிலும் இந்தத் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் அமைக்கப்ப்பட்டிருந்த சுமார் 5,500 தேர்வு மையங்களில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த மருத்துவ நுழைவுத் தேர்வை மிகுந்த எதிர்பார்ப்புடன் எழுதினர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 307 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த மறுதேர்வில் பங்கேற்றனர். தலைநகர் சென்னையில் மட்டும் 43 மையங்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதியுள்ளனர். வினாத்தாள் கசிவு சர்ச்சைகளுக்குப் பின் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், திட்டமிட்டபடி வரும் ஜூலை 20-ம் தேதி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகும் என்பதால் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


AthibAn Tv