“உதவிப் பேராசிரியர் தேர்வு மதிப்பெண்களில் வண்ண அடையாளங்கள் ஏன்?” - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
சென்னை: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் போட்டித் தேர்வுகளில் அடுத்தடுத்து எழுந்துள்ள முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து அரசு உடனடியாக விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சில தேர்வர்களின் மதிப்பெண்களில் விசித்திரமான வண்ண அடையாளங்கள் (Color Coding) இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடைத்தாள் குளறுபடிகளும் புதிய வண்ண சர்ச்சையும்:
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 2,708 உதவிப் பேராசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கு இன்னும் உரிய விளக்கம் அளிக்கப்படாத நிலையில், தற்போது சில தேர்வர்களின் மதிப்பெண்களில் வண்ண அடையாளங்கள் இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் தொடர்பான ஒரு முக்கிய விஷயத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது."
நீலம், மஞ்சள் குறியீடுகள் - தேர்வர்கள் சந்தேகம்:
"குறிப்பாக, ஆங்கிலப் பாட உதவிப் பேராசிரியர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியலில், சில இடங்களில் நீலம் மற்றும் சில இடங்களில் மஞ்சள் வண்ணங்களில் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த வண்ணக் குறியீடுகள் மூலம் சில குறிப்பிட்ட தேர்வர்களுக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ மதிப்பெண்களில் முறைகேடான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என்று தேர்வர்கள் மத்தியில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஐயங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாகப் போக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
பூஜ்ஜியமும் 98 சதவீதமும்: சாத்தியமே இல்லாத மதிப்பெண்கள்!
இந்தத் தேர்வில் நிலவும் குளறுபடிகளைப் பட்டியலிட்ட அவர், "உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் நடந்ததாகக் கூறப்படும் விசித்திரமான முறைகேடுகளைப் பாட்டாளி மக்கள் கட்சிதான் முதலில் அம்பலப்படுத்தியது. இந்தத் தேர்வில் முதல் தாளில் (விருப்பப்பாடம்) 111 மதிப்பெண்கள் எடுத்த ஒரு தேர்வர், இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் (0) மதிப்பெண் எடுப்பதும்; அதேபோல் முதல் தாளில் வெறும் 54 (36%) மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த மற்றொரு தேர்வர், இரண்டாம் தாளில் 49 (98%) மதிப்பெண்கள் பெறுவதும் நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒன்றாகும். இப்படி அடுத்தடுத்து புகார்கள் எழுவது தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மையைக் குலைப்பதாக உள்ளது" எனச் சாடியுள்ளார்.
2017 முறைகேட்டை நினைவூட்டிய அன்புமணி:
"கடந்த 2017-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர்களைத் தேர்வு செய்ததில் நடந்த மிகப்பெரிய முறைகேடுகளையும், அது தொடர்பாக இப்போதும் சிபிசிஐடி விசாரணை நடந்து வருவதையும் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் இளைஞர்கள் பங்கேற்கும் தேர்வுகளை நடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம், ஐயங்களுக்கு அப்பாற்பட்டதாக விளங்க வேண்டும். ஆனால், தவறான காரணங்களுக்காக வாரியம் தனது நன்மதிப்பைத் தொடர்ந்து இழந்து வருகிறது.
எனவே, உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக அடுத்தடுத்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விரிவான விசாரணை நடத்த உடனடியாக ஆணையிட வேண்டும். இதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



AthibAn Tv