நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பதிவான மொத்த சராசரி வாக்கு எண்ணிக்கை 69.46 சதவீதம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்காடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அனைவரும் வாக்களிக்க வசதியாக தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
கோடை வெயில் சுட்டெரித்ததால் ஏராளமான வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளை முற்றுகையிட்டனர். பிற்பகல் மற்றும் மதியம் பல இடங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவே காணப்பட்டது. மாலையில் மீண்டும் வேகம் பிடித்தது.
முதல்முறை வாக்காளர்கள், கைக்குழந்தைகளுடன் வாக்களிக்க வந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சக்கர நாற்காலியில் கொண்டு வந்தவர்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். முதல்முறை வாக்காளர்கள் பலர் வாக்களித்த பின் மை தடவிய விரல்களால் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. ஆனாலும் வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. எனவே 6 மணிக்கு முன் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று காலை 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பதிவான மொத்த சராசரி வாக்கு எண்ணிக்கை 69.46 சதவீதம் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3 சதவீத வாக்குகள் குறைவாகப் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகளும், மிகக் குறைந்த அளவாக மத்திய சென்னை தொகுதியில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

AthibAn Tv