
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் வங்கி முறைகேடு தொடர்பான வழக்கில், காங்கிரஸ் பொருளாளர் அகமது படேலிடம், மத்தியஅமலாக்க துறை அதிகாரிகள் இரண்டாவது முறையாக நேற்றும்(ஜூன் 30) விசாரணை நடத்தினர்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, 'ஸ்டெர்லிங் பயோடெக்' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளான நிதின் சந்தேசரா, சேட்டன் சந்தேசரா, தீப்தி சந்தேசரா ஆகியோர், வங்கியில், 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.அதை வேறு வழிகளில் தவறாக செலவு செய்ததாக, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் தனித் தனியே வழக்குப் பதிவு செய்துள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், வங்கி முறைகேடில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று பேரும், ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் தலைமறைவாக உள்ளனர்.
8 மணி நேரம்
ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றிய சுனில் யாதவிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின் மகன் பைசலுக்கு இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, சமீபத்தில், டில்லியில் உள்ள அகமது படேலின் வீட்டுக்கு வந்த அமலாக்க துறை அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இரண்டாவது முறையாக, நேற்று அவரிடம் மீண்டும் விசாரணை நடந்தது. டில்லியில் உள்ள அவரது வீட்டுக்கு, அமலாக்க துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் வந்தனர்.ஏராளமான ஆவணங்களை எடுத்து வந்த அவர்கள், அவற்றின் அடிப்படையில் அகமது படேலிடம் துருவித் துருவி பல்வேறு கேள்விகளை கேட்டதாக தெரிகிறது.
'பயமில்லை'
இது குறித்து அகமது படேல் கூறியதாவது: இந்த வழக்கில், திடீரென என்னிடம் விசாரணை நடத்துவது ஆச்சரியமாக உள்ளது. மத்திய அரசு என்னை குறிவைத்து, பழி வாங்கும் அரசியல் நடத்துகிறது.எல்லையில் அத்துமீறும் சீனா, வேகமாக பரவும் கொரோனா வைரஸ் ஆகியவற்றுக்கு எதிராக போரிட வேண்டிய நேரத்தில், மத்திய அரசு என்னை குறி வைக்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

AthibAn Tv