
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதில் ஈடுபட்டுள்ளோரை உற்சாகப்படுத்தும் வகையிலும், நாட்டின் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன், சத்குரு கலந்துரையாடினார்.
நாட்டில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கல்வியாளர்கள், மருத்துவர்கள், வர்த்தக தலைவர்கள், பாதுகாப்பு படையினர் என, பல தரப்பினருடன், ஈஷா அறக்கட்டளை தலைவர் சத்குரு, 'ஆன்-லைன்' வழியாக கலந்துரையாடி, ஊக்கப்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன், சத்குரு கலந்துரையாடினார்.
அவர்களிடம், நிர்வாக ரீதியாக முடிவெடுப்பதில் உள்ள இடர்பாடுகள், மனிதாபிமான அடிப்படையில் சட்டத்தை நிலை நிறுத்தும் வழிமுறைகள், தெளிவற்ற சட்டங்களை கையாளுதல் உள்ளிட்ட விஷயங்களை கலந்துரையாடினார்.
சத்குரு கூறியதாவது: அரசு இயங்க பலர் பங்களிப்பு இருந்தாலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தான், நாட்டின் முதுகெலும்பாக செயல்படுகின்றனர். அவர்கள், மாற்றங்களை உருவாக்கும் திறன் படைத்தவர்கள். வரும், ஐந்து ஆண்டுகளில், நாம் செய்யும் செயல்கள் தான் அடுத்த, 100 ஆண்டுகளில் நடக்கும் என்பதை தீர்மானிக்கும். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நம் தேசத்து இளைஞர்களுடன் தொடர்ந்து உரையாடல் நிகழ்த்தி, அவர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

AthibAn Tv