
இந்தியா, அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும், அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கும் என சீனாவுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மஹாராஷ்டிரா, தமிழகம், டில்லி உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதன் தொடக்கத்தில் லடாக் எல்லையில் அத்துமீறிய சீன ராணுவத்தினர் உடனான தாக்குதலில் வீர மரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில முதல்வர்கள் ஆகியோர் காணொலி காட்சி மூலமாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த மோடி பேசியதாவது: எல்லையை காக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு தான். அதேநேரத்தில் அத்துமீறினால் எந்தவொரு சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கும் பலம்வாய்ந்த நாடாகும்.
இந்தியாவின் துணிச்சல் மற்றும் வீரத்தை பற்றி உலகிற்கே தெரியும். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவை கோபப்படுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். ஆத்திரமூட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது.
இந்தியாவில் தற்போது 1 கோடி பிபிஇ கிட்கள் உற்பத்தி செய்கிறோம். சுமார் 900 பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கையானது, தற்போது சிகிச்சையில் உள்ளோர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொரோனாவை எதிர்த்து போராடவும், அதன் பரவலை கட்டுப்படுத்தவும் முடிந்தது.இவ்வாறு அவர் பேசினார்.

AthibAn Tv