
கொரோனா வைரஸ் தொடர்பாக பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த, ஐ.நா.,வுடன், இந்தியா உள்ளிட்ட, 13 நாடுகள் கைகோர்த்துள்ளன.
கொரோனா வைரஸ், உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. நியூயார்க்கில் உள்ள ஐ.நா., சபையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொலைதொடர்பு வசதிகள், வரும் ஜூலை, 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன
.இதற்கிடையே, வைரஸ் தொடர்பாக பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த, உலக நாடுகள், ஐ.நா.,வுடன் கைகோர்த்துள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தோனேஷியா, லாட்வியா, சிலி, ஜார்ஜியா, லெபனான், மெக்சிகோ, மொரீஷியஸ், நார்வே, செனெகல், தென் ஆப்ரிக்கா ஆகிய, 13 நாடுகள் இதை முன்னெடுத்துள்ளன. இதற்கு, 132 உறுப்பு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. தவறான தகவல்கள் பரவலை தடுக்க, 'வெரிபைடு' - உறுதி செய்யப்பட்டது என்ற, முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிகாரப்பூர்வ மற்றும் உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் நேற்று கூறியதாவது:கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வரும் நிலையில், தீங்கு விளைவிக்கும் சுகாதார ஆலோசனைகள், வெறுக்கத்தக்க பேச்சு உள்ளிட்ட பல தவறான தகவல்கள், வேகமாக பரவி வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்து குறித்த பொய்யான தகவல்களும் வலம் வருகின்றன. இதை தடுக்க, விஞ்ஞானிகள், மற்றும் ஐ.நா., போன்ற அமைப்புகள், உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டியது அவசியம். இதற்காக, இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தியா உள்ளிட்ட, 13 நாடுகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வைரஸ் தொடர்பான தவறான தகவல்கள், மக்கள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தாக முடியும். அதுவே ஒரு நோயாக மாறிவிடும். இது, எங்களை வருத்தமடைய செய்துள்ளது. ஆகையால், உண்மை, துல்லியம், தெளிவு மற்றும் அறிவியல் அடிப்படையிலான தகவல்கள் பரப்பப்படவேண்டும். இதை, உலக நாடுகள் உறுதிபடுத்தவேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கொரோனா என்பது ஒரு பாக்டீரியா என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் தகவல்கள் பரவின. அந்த தகவலை, நம் மத்திய அரசு மறுத்துள்ளது.'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில், அரசின் பத்திரிகை தகவல் மையம் கூறியிருப்பதாவது: சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில், கொரோனா வைரஸ், ஒரு பாக்டீரியா என்றும், அதை 'ஆஸ்பிரின்' மூலம் குணப்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த கூற்றுகள் அனைத்தும் போலியானவை. கொரோனா என்பது ஒரு வைரஸ்; அதை குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


AthibAn Tv