
'பா.ஜ.க வைச் சேர்ந்த, மத்திய ஜவுளி அமைச்சர், ஸ்மிருதி இரானியை காணவில்லை' என, அவருடைய லோக்சபா தொகுதியான, உத்தர பிரதேசத்தின் அமேதியில், 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் வெளியிட்ட செய்திக்கு, அவர் தகுந்த பதிலடியைக் கொடுத்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில், நீண்டகாலமாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, எம்.பி.,யாக இருந்தனர். கடந்த லோக்சபா தேர்தலில், சோனியாவின் மகனும், காங்., முன்னாள் தலைவருமான ராகுலை தோற்கடித்தவர் ஸ்மிருதி இரானி.
இந்நிலையில், காங்கிரஸ், மகளிர் அணி சார்பில், சமூக வலைதளத்தில், ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'தொகுதி பக்கமே தலைகாட்டாத, ஸ்மிருதி இரானியை காணவில்லை என்று, தொகுதியில் பல இடங்களில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. 'கடந்த, இரண்டு ஆண்டுகளில், இரண்டு நாட்களில், அதுவும் சில மணி நேரங்களே அவர் தொகுதிக்கு வந்துள்ளார்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு, சமூக வலைதளத்தில் அளித்துள்ள பதிலில், ஸ்மிருதி இரானி கூறியுள்ளதாவது: பெயரைக் குறிப்பிடாமல், இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் மோசமான அரசியல் நாடகத்தையே வெளிகாட்டுகிறது. கடந்த, எட்டு மாதங்களில், 10 முறை, 14 நாட்கள் தொகுதிக்கு நான் சென்றுள்ளேன்.ஊரடங்கு காலத்தில், என் தொகுதியைச் சேர்ந்த, 22 ஆயிரத்து,150 பேர் பஸ்கள் மூலமும், 8,322 பேர் ரயில்கள் மூலமும் திரும்புவதற்கு உதவி செய்துள்ளேன். அவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட நான் தயார். மக்களுக்கு அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளேன்.
ஊரடங்கு அமலில் உள்ளதால், அதை மதித்து, நான் தொகுதிக்கு செல்லவில்லை. நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்க விரும்பவில்லை. இதுபோல், காங்., தலைவர் சோனியா எத்தனை முறை, தன் தொகுதியான ரேபரேலிக்கு சென்றுள்ளார் என்ற விபரத்தை வெளியிட காங்., தயாரா?இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

AthibAn Tv