லடாக்கில் நடந்த மோதல் குறித்து முப்படை தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய ராஜ்நாத் சிங், எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டார்.
மோதல் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் நேற்று ஆலோசனை நடந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர். தற்போதைய சூழல் குறித்தும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும் ராஜ்நாத் ஆலோசனை நடத்தினார்.
ராஜ்நாத் உத்தரவு
ஆலோசனைக் கூட்டத்தில், சீன எல்லை மட்டுமல்லாமல் பிற எல்லைகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ராஜ்நாத்சிங் அறிவுறுத்தினார். மேலும், எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும், தேவையான இடங்களுக்கு கூடுதல் வீரர்களை அனுப்பவும் அவர் உத்தரவிட்டார்.
வேதனை
ராஜ்நாத் சிங், தனது டுவிட்டர் பக்கத்தில், 'வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு நாட்டு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். சீனாவின் அத்துமீறலால் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தது வேதனையளிக்கிறது. வீரர்களின் தியாகம், துணிச்சலை நாடு ஒருபோதும் மறக்காது. இந்திய வீரர்கள் தங்களின் உச்சபட்ச வீரத்தை வெளிப்படுத்தி நமது நிலப்பகுதியை காப்பாற்றியுள்ளனர்,' எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் ஆலோசனை
முன்னதாக லடாக்கில் ஏற்பட்ட மோதல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ தளபதி எம் எம் நரவானே ஆகியோர் கலந்து கொண்டனர்.


AthibAn Tv