
டில்லி மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும்படி, டில்லி அரசுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
டில்லியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரிசோதனை செய்யப்படும் மூன்று பேரில் ஒருவருக்கு அங்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் கெஜ்ரிவால், டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆகியோருடன், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, நேற்று(ஜூன் 14) ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப்பின், டில்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த அடுத்த 6 நாட்களில், பரிசோதனை 3 மடங்கு அதிகரிக்கப்படும் என அமித் ஷா தெரிவித்தார்.
இந்நிலையில், டில்லி மருத்துவமனைகளில் உள்ள அனைத்து கொரோனா வார்டுகளிலும், சிசிடிவி கேமராக்களை பொருத்தும் படி, டில்லி தலைமை செயலருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். இதனால் கண்காணிப்புகள் அதிகரிப்பதுடன், நோயாளிகளின் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது.


AthibAn Tv