
பிரதமர் மோடியை எந்த பிரமுகர் சந்தித்தாலும், உடனே இருவரும் இணைந்து நிற்பது போல புகைப்படம் வெளிவரும். மோடியே இதை, அவருடைய, 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிடுவார். ஆனால், இப்போது கொரோனாவால் எல்லாம், 'அவுட்!'
பிரதமர் இல்லத்திலேயே ஒரு பெரிய அலுவலகம் உள்ளது. இப்போது, அங்கிருந்து தான், தன் பணிகளை மேற்கொண்டு வருகிறார் மோடி. இங்கு வரும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு, நான்கு அடுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. முதலில் அவர்களுடைய உடல் வெப்பம், பின், அவர்களின் மருத்துவ அட்டை போன்றவை சோதிக்கப்படுகின்றன.
இந்த சோதனைகளை முடித்த பிறகு தான், இவர்கள் பிரதமர் இல்லத்திற்குள் நுழைய முடியும். இந்த விவகாரத்தில், பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும், எஸ்.பி.ஜி., என்ற, சிறப்பு அதிரடிப்படை மிகவும் கறாராக உள்ளது. விருந்தினர்கள், பிரதமரைச் சந்திக்கும் அறையும், பெரிய அரங்கு போல இருக்கும். அங்கு இடைவெளி விட்டு அமர வேண்டும். எந்த கோப்புகளையும் அல்லது ஆவணங்களையும் இங்கு எடுத்து வரக் கூடாது. எல்லாம், 'டிஜிட்டல்' தான்.அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானங்கள்; அது சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என, அனைத்தும், 'டேப்லட், ஐ பேட்' மூலமாகத்தான் பிரதமருக்கு காட்ட முடியும். அமைச்சரவை முடிவுகள் அனைத்தும், 'இ - மெயில்' மூலமாக அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
எப்போதும் பிரதமர் வீட்டில், 15 டாக்டர்கள் அடங்கிய குழு இருக்கும். கொரோனா சமயம் என்பதால், இவர்கள் மிகவும் கவனமாக இருக்கின்றனர். அடிக்கடி பிரதமரை பரிசோதிக்கின்றனர். எந்த அறையில் கூட்டம் நடந்தாலும், அது முடிந்தவுடன், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக செயலருக்கு, சமீபத்தில் தொற்று ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மிகவும் கவனமாகவும், கறாராகவும் உள்ளனர்.


AthibAn Tv