
கொரோனா பரவலை தடுக்க, கடந்த மார்ச், 25ல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன், நாட்டில், ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்காக, கடந்த மாதம், 1ம் தேதி முதல், தொழிலாளர் சிறப்பு ரயில்களை, ரயில்வே இயக்கி வருகிறது. கடந்த, 12ம் தேதி முதல், பயணியர் வசதிக்காக, டில்லியிலிருந்து, 15 நகரங்களுக்கு, 'ஏசி' ரயில்களை இயக்கி வருகிறது.
இந்நிலையில், ரயில் சேவையை மீண்டும் துவக்க, ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, இன்று முதல், 200 ரயில்களை, அட்டவணைப்படி, ரயில்வே இயக்குகிறது. இது பற்றி ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதல் நாளான இன்று மட்டும், 1.45 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்ய உள்ளனர்.
இன்று முதல், 10ம் தேதி வரை, 26 லட்சம் பயணியர், முன் பதிவு செய்துள்ளனர்.ரயில் புறப்படுவதற்கு, 90 நிமிடத்துக்கு முன், ரயில் நிலையத்துக்கு பயணியர் வர வேண்டும். உறுதி செய்யப்பட்ட டிக்கெட் அல்லது ஆர்.ஏ.சி., டிக்கெட் வைத்திருக்கும் பயணியர் மட்டுமே, ரயில் நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். அனைத்து பயணியருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே, ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.

AthibAn Tv