ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கடுமையான வெப்ப அலை: பிரான்சில் 845 பள்ளிகள் மூடல் - 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை!
பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை (Heatwave) வீசி மக்களை நிலைகுலையச் செய்து வருகிறது. குறிப்பாக, பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை வரலாறு காணாத வகையில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்தப் பகுதிகளில் 3-ல் ஒரு பகுதிக்கு 'ரெட் அலர்ட்' (Red Alert) எனப்படும் மிக உயர்மட்ட அவசரநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் மூடல் மற்றும் புதிய கட்டுப்பாடுகள்
வெப்பத்தின் கொடூர தாக்கத்தால் மக்கள் எளிதில் நீர்ச்சத்துக் குறைபாட்டிற்கு (Dehydration) ஆளாவதைத் தடுக்கும் பொருட்டு, பிரான்ஸ் அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் மக்கள் மது அருந்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிரான்ஸ் முழுவதும் 845 பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன. வெப்ப அலையின் தீவிரம் காரணமாகப் பல இரயில் சேவைகளும், முன்னரே திட்டமிடப்பட்டிருந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நீரில் மூழ்கிப் பலி: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
அதீத வெப்பத்தைத் தணித்துக் கொள்வதற்காக மக்கள் ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளித்து வருகின்றனர். அவ்வாறு குளித்த போது ஏற்பட்ட விபத்துகளில், பிரான்சில் மட்டும் 4 சிறுவர்கள் உட்பட ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் பலர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வெப்பத்தின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள், நோயாளிகள் மற்றும் வீடற்ற ஏழை எளிய மக்களைப் பாதுகாக்கும் பணிகளில் அந்நாட்டு மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உலகளவில் ஏற்பட்டு வரும் மிக மோசமான பருவநிலை மாற்றமே (Climate Change) ஐரோப்பாவின் இந்த அதீத வெப்ப நிலைக்கு முதன்மைக் காரணம் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.


AthibAn Tv