யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்வான 81 மாணவர்களுக்கு அமைச்சர் சரத்குமார் நேரில் பாராட்டு!
சென்னை:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் (Prelims) வெற்றி பெற்று, அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ள தமிழக மாணவர்களைப் பாராட்டும் சிறப்பு நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது. இது குறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் நல்வழிகாட்டுதலின்படி, பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் சென்னை அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் (22.06.2026) இன்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய முதன்மைத் தேர்வுப் பயிற்சிக்கான (Mains Coaching) துவக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்குத் தமிழக மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் த.சரத்குமார் தலைமை தாங்கினார்.
மாணவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் புதிய பயிற்சி மைய அறிவிப்பு
இவ்விழாவில், முதன்மைத் தேர்வுப் பயிற்சிக்குத் தகுதி பெற்றுள்ள சிவில் சர்வீசஸ் ஆர்வலர்களுடன் அமைச்சர் த.சரத்குமார் நேரில் கலந்துரையாடினார். அப்போது, சென்னை அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று, முதல்நிலைத் தேர்வில் சாதனை படைத்த 81 மாணவ, மாணவிகளைத் தட்டிகொடுத்துப் பாராட்டினார்.
பின்னர் மாணவர்களிடையே பேசிய அமைச்சர், "பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் சிவில் சர்வீசஸ் ஆர்வலர்களுக்கு முழுமையாகப் பயனுள்ள வகையில் அமையும் பொருட்டு, அனைத்துத் தேவையான நடவடிக்கைகளும் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும். மேலும், சென்னை அண்ணா நகரில் புதிதாகக் கட்டப்பட இருக்கும் அதிநவீன பயிற்சி மையத்தில், வருங்காலத்தில் தற்போதிருப்பதை விட அதிகளவிலான ஆர்வலர்கள் சேர்க்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்கள் மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வுகளில் அதிக அளவில் வெற்றி பெற்று, இந்திய அளவில் மிக உயர்ந்த ஆட்சிப் பொறுப்புகளை வகிக்க வேண்டும்" என்று தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு
இந்தக் கலந்துரையாடல் மற்றும் துவக்க நிகழ்வின் போது, மனிதவள மேலாண்மைத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநர் மற்றும் பயிற்சித் துறைத் தலைவர் ச.கோபால சுந்தரராஜ், போட்டித்தேர்வுகளுக்கான கூடுதல் இயக்குநர் முனைவர் தே.சங்கர சரவணன், பயிற்சி மைய முதல்வர் கா.காயத்திரி சுப்பிரமணி உள்ளிட்ட பல முக்கிய அரசு உயர் அதிகாரிகளும், துறை சார்ந்த அலுவலர்களும் உடன் கலந்து கொண்டனர்.


AthibAn Tv