
இந்திய தனியார் துறையினர் இனி இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு தேவையான ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் மற்றும் இதர சேவைகள் மேற்கொள்ளலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பிற கிரகங்களுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பும் திட்டத்தில் இனி தனியார் நிறுவனங்களும் பங்கு கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளதாக சிவன் தெரிவித்தார். கடந்த புதனன்று இதற்கான அனுமதியை கேபினட் அமைச்சர்கள் அளித்தது குறிப்பிடத்தக்கது.
தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரோவும் இனி ஒன்றாக பணிபுரியும் என சிவன் கூறியுள்ளார். மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டம் வெகுநாட்களாக விஞ்ஞானிகளால் ஆராயப்படும் திட்டமாகும். அதற்கு தனியார் நிறுவனங்களின் முதலீடு மற்றும் சேவை இன்றியமையாதது என மத்திய அரசு கருதுகிறது. இதனால் இஸ்ரோவுக்கு பல புதிய தொழில்நுட்ப வசதிகள் செய்து தர இயலும் என்பதால் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் காரணமாக எதிர்காலத்தில் ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட் தயாரிப்பில் மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படாது. மேலும் வளர்ந்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறை புதிய உச்சத்தை தொடும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நாசாவுக்குப் பிறகு மிகப்பெரிய விஞ்ஞான ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாகத் திகழும் இஸ்ரோ, விரைவில் புதிய மைல்கல்லை எட்டும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.


AthibAn Tv