
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், மின்சார வாகனங்களின் உற்பத்தி மையமாக இந்தியா மாறும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
'கோவிட்-19க்கு பிந்தைய காலத்தில் இந்தியாவின் மின்சார வாகனத் திட்டம்' என்ற தலைப்பிலான இணையக் கருத்தரங்கில் பங்கேற்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது: அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறும். அதன் உற்பத்தி மையமாக மாறும். இத்துறைக்கு முடிந்த அளவு சலுகைகள் அளிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் வர்த்தகம் செய்வதில் உலகம் இனி ஆர்வம் காட்டவில்லை, இது இந்தியத் தொழிலுக்கு வணிக மாற்றத்தை எடுக்க ஒரு நல்ல வாய்ப்பாகும். பெட்ரோலிய எரிபொருள் குறைந்த அளவில் கிடைப்பதால், மலிவான மாற்று எரிசக்தியில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு மின்சாரம் மற்றும் உயிரி எரிபொருள்கள் நல்ல வாய்ப்பாக உள்ளது.
பழைய வாகனங்கள் ஒழிக்கும் கொள்கையைத் தொடர்வது, வாகன உற்பத்தித் துறைக்கு ஊக்கமளிக்கும். பொருளாதார நெருக்கடியிலும், நிலைத்தன்மை மற்றும் தன்னம்பிக்கையுடன், வாகனத்துறையால் நல்ல சந்தை வாய்ப்புகளைப் பெறமுடியும். வாகனத்துறை உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பிரதமரின் சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


AthibAn Tv