
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து 60 நாளில் நாடு முழுவதும் 19.23 கோடி உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாக பாஜ., தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அத்யாவசிய சேவைகள் தவிர அனைத்து சேவைகளும் தடைப்பட்டன. இதனால், கூலித் தொழிலாளர்கள், அன்றாடம் உழைத்து உண்ணும் ஏழைகள் உணவின்றி தவித்தனர். இதனால், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என பாஜ.,வினருக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கினால் உணவின்றி தவித்தவர்களுக்கு பாஜ.,வினர் உணவுப்பொட்டலங்களையும், உணவுப் பொருட்களும், பொதுமக்களுக்கு மாஸ்க்குகளும் விநியோகித்தனர். இது தொடர்பான புள்ளி விவரத்தை பாஜ., தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஊரடங்கு தொடங்கிய மார்ச் 25 முதல் மே 23 வரையிலான காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினரையும் சேர்ந்த 5 கோடி மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்க திட்டமிடப்பட்டது.
ஆனால் இந்த 60 நாட்களில் 19.28 கோடி உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், 5 கோடி மக்களுக்கு மாஸ்க் அளிக்கத் திட்டமிட்டு, 5.2 கோடி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. 4.86 கோடி எண்ணிக்கையிலான உணவுப்பொருட்களும் தேவையானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப்பணியில் 8.23 லட்சம் பாஜ.,வினர் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


AthibAn Tv