
நாளை (மே 25) முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் மார்ச் 25 முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், மே 31 வரையில் நாடு முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது. இதனால், பஸ், ரயில், விமானப் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் விமான சேவை தொடங்குவதற்கான வழிகாந்து நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
- விமானம் மூலம் தமிழகத்துக்கு வருபவர்கள் தமிழக இ-பாஸ் வலைத்தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
- விமான டிக்கெட் வாங்கியவுடன் தங்கள் விவரங்களையும், எந்த விமான நிலையம் வந்து சேருவர் என்ற தகவலையும் தமிழக இ-பாஸ் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- தாங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து வரவில்லை என்பதற்கான உறுதியை தர வேண்டும்.
- விமானப் பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
- நோய் அறிகுறி இல்லாமல் இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
- தவறான தகவல் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்னை ஏதும் இல்லை என்பது குறித்தும் உறுதி மொழி அளிக்க வேண்டும்.
- காய்ச்சல், இருமல் பிரச்னை ஏற்பட்டால் உடனே மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

AthibAn Tv