"வரைமுறையின்றி பேசுகிறார் ஆ. ராசா" - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சரவையில் பங்கேற்றுள்ள விசிக, காங்கிரஸ் மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை திமுகவின் ஆ. ராசா தொடர்ந்து விமர்சித்து வரும் சூழலில், அவரது பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணித் தலைவரும், தமிழக சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு கடும் கண்டனமும் பதிலடியும் கொடுத்துள்ளார்.
எல்லையற்ற விமர்சனங்கள்: அமைச்சர் வன்னி அரசு ஆவேசம்
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் சமீபத்திய அரசியல் கருத்துக்கள் குறித்துப் பேசுகையில் தங்களது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது:
"திமுகவின் ஆ. ராசா அவர்கள் சமீபகாலமாக மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றுதான் நமக்குத் தெரியவருகிறது. பொதுவெளியில் எதைப் பேச வேண்டும், கூட்டணிக் கட்சிகளைப் பற்றி எதைப் பேசக்கூடாது என்கின்ற எந்தவொரு வரைமுறையும், எல்லையும் இல்லாமல் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
எனவே, திமுகவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆ. ராசாவை உடனடியாக நேரில் அழைத்து இத்தகைய பேச்சுக்களுக்காகக் கண்டிக்க வேண்டும். அவர் பேசுவது என்பது அவருக்கே முறைதானா... அது சரியா என்பதை நான் அவருடைய கோணத்திற்கே விட்டுவிடுகிறேன்."
முதிர்ச்கியற்ற பேச்சுகளால் கூட்டணியில் விரிசல்?
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசியல் நகர்வுகள் மற்றும் தவெக அமைச்சரவையில் தோழமைக் கட்சிகள் பங்கேற்பது குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக - விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஆ. ராசாவின் பேச்சுக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தன.
இத்தகைய சூழலில், விசிகவின் முக்கிய முகமான அமைச்சர் வன்னி அரசு, ஆ. ராசாவின் கருத்துக்களைக் கடுமையான வார்த்தைகளால் சாடியிருப்பது, தற்போதைய அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.


AthibAn Tv