நாட்டின் வளர்ச்சியை மகனாகவும், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை மகளாகவும் ஒப்பிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ டுவிட்டரில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசன் ரவு தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் கல்வி அமைச்சருமான ஜிது பட்வாரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛மக்கள் ஒரு மகனை எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு பதிலாக அவர்களுக்கு கிடைத்தது ஐந்து மகள்கள். இந்த மகள்கள் அனைவரும் பிறந்தனர். ஆனால் விகாஸ் என்ற மகன் இன்னும் பிறக்கவில்லை' என பதிவிட்டிருந்தார். 2014 மற்றும் 2019ம் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் பிரதமர் மோடி முன்வைத்த ‛சப்கா சாத் சப்கா விகாஸ்' என்ற கோஷத்தை கேலி செய்கிறேன் என பெண் குழந்தைகளை தரக்குறைவாக ஜிது பட்வாரி விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.
ஜிது பட்வாரியின் கருத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பா.ஜ.க இது குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா பதிலளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. ‛ராணி துர்காபாயின் தியாகத்தை நாடே கொண்டாடி வரும் தினத்தன்று, மகனுக்கு பதிலாக 5 மகள்கள் பிறந்துள்ளனர் என பட்வாரி கூறியுள்ளார். மகள்களாக பிறப்பது என்ன குற்றமா? மகள்களை இழிவுப்படுத்தும் பணியை சோனியா அவருக்கு வழங்கியுள்ளாரா?' என முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கண்டனத்தை பதிவு செய்தார்.
காங்கிரஸ் எம்.எம்.ஏ.,வின் கருத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. ‛மக்கள், இது போன்ற மனநிலையுடன் உள்ளவர்களை தலைவர்கள் என்று அழைப்பது வருத்தமளிக்கிறது. அவர்கள் தங்களைப் பின்பற்றுபவர்களுக்கு என்ன கற்றுகொடுப்பார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரிடமிருந்து நிச்சயமாக விளக்கம் கேட்கப்படும்' என தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா ஷர்மா தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்ட பட்வாரி
கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜிது பட்வாரி, ‛நாட்டின் பொருளாதாரத்தை பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, மந்தநிலை ஆகியவற்றால் மோடி உடைத்துவிட்டார். வளர்ச்சிக்காக மக்கள் இதையெல்லாம் சகித்து கொண்டார்கள். என்னுடைய கருத்து யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன். மகள்களைப் பொருத்தவரை அவர்கள் தெய்வங்கள்,' எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


AthibAn Tv