
தமிழக அமைச்சர் அன்பழகன், கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், முதல்வர் அலுவலகத்தில், ஐந்து பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மட்டுமின்றி, எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, அரசியல் பிரமுகர்களும், அடுத்தடுத்து கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கொரோனா அறிகுறியுடன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், 'அவர் நலமுடன் உள்ளார்; சளி பிரச்னை தான்; கொரோனா பாதிப்பு இல்லை' என, அமைச்சர் தரப்பினர் தெரிவித்தனர்.
முதல்வர் அலுவலகம்
தலைமை செயலகத்தில், முதல்வரின் தனிச்செயலர் தாமோதரன், கொேரானாவால் இறந்தது, அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் பணிக்கு வந்த, முதல்வர் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஐந்து டிரைவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதியானதாக, தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
நேற்று பணிக்கு வந்த, 45 ஊழியர்களுக்கும், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. முடிவுகள் இன்று வெளியாகும். மேலும், அமைச்சர்களின் உதவியாளர், பாதுகாவலர், டிரைவர் என, பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, அமைச்சர்களிடம், தலைமை செயலக ஊழியர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


AthibAn Tv