கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.
அதன்பின், கோவை மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் உக்கடத்தில், ரூ.39.74 கோடி மதிப்பீட்டில், பெரிய குளத்தின் வடகரையில் புனரமைக்கப்பட்ட ஒரு பகுதியை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதேபோல், கோவை மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ் மேம்பாடு செய்யப்பட்ட ரூ.23.83 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட, அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், 2.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதிய கட்டடத்தையும் காணொலி காட்சி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார்.இதையடுத்து, அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடன் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆய்வு
இன்று கோவை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திடீர் நிகழ்வாக, நகர பேருந்து நிலையத்திற்கு வந்தார். யாரும் எதிர்பாராத சமயத்தில், பெண் பயணிகளை சந்தித்து விசாரித்தார். உக்கடம் செல்லும் பஸ்சில் ஏறி, பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக பயணிகளுக்கு அறிவுரை வழங்கினார். பின், பெட்டிக்கடைக்கு சென்று, வியாபாரம் தொடர்பாக கேட்டார். தரமான முக கவசம் விற்க அறிவுரை வழங்கினார்.



AthibAn Tv