
ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் வீசிய வெடிகுண்டால் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். பொது மக்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் அத்துமீறி தாக்குதல் மற்றும் ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (ஜூன் 10) இரவு ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுக்கு இடையே செயல்படும் தர்கண்டி செக்டாரில் திடீரென பாகிஸ்தான் படையினர் பெரியளவில் தாக்குதலை ஆரம்பித்தனர். இதில் எல்லை பாதுகாப்பு பணியிலிருந்த வீரர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார். ராஜ்தானி கிராமத்தைச் சேர்ந்த நயம்துல்லா (35) என்பவர் படுகாயமடைந்தார்.
அதுமட்டுமின்றி இன்று (ஜூன் 11) அதிகாலை 2 மணியளவில் புத்கம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் 3 தீவிரவாதிகள் பதன்போரா கிராமத்தில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் ஞாயிறு முதல் நடைபெறும் நான்காவது என்கவுன்டர் இதுவாகும். சோபியான் மாவட்டத்தில் நடந்த முந்தைய 3 என்கவுன்டர்களில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

AthibAn Tv