
கொரோனா சிகிச்சை முறைகளை வலுப்படுத்தும் விதமாக மேலும் 2,834 மருத்துவ பணியாளர்களை நியமித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, கொரோனா நோய் தொற்றுக்கு மேற்கொண்டு வரும் சிகிச்சை முறைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஏற்கனவே 530 டாக்டர்கள், 4893 நர்ஸ்கள், 1508 லேப் டெக்னீசியன்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்களை பணியமர்த்த முதல்வர் இபிஎஸ் உத்தரவிட்டார்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் மருத்துவ படிப்பினை முடித்த 574 அரசு பணியில் அல்லாத முதுநிலை மருத்துவ மாணவர்களை மாத ஊதியம் ரூ.75 ஆயிரம் வீதத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய கூடுதலாக நியமிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், மாத ஊதியம் ரூ.60 ஆயிரம் வீதத்தில் 665 டாக்டகர்களையும், மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வீதத்தில் 365 லேப் டெக்னீசியன்களையும், மாத ஊதியம் ரூ.12 ஆயிரம் வீதத்தில் 1230 பல்நோக்கு சுகாதார பணியாளர்களையும் பணி நியமனம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


AthibAn Tv