12-ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய நபர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை கர்ப்பமாக்கியதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் மீது, காவல்துறையினர் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகிலுள்ள கடையாம்பட்டியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர், அப்பகுதியிலுள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், அவரது வயிறு பெரிதாகத் தெரிந்ததால் கர்ப்பமாக இருக்கலாம் என்று சந்தேகித்த அவரது தாயார், அவரை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அந்த மாணவி ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இத்தகவலால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், பொறுப்பு ஆய்வாளர் கலையரசி தலைமையிலான காவல் குழுவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில், ஆறு மாதங்களுக்கு முன்பு அண்டை வீட்டைச் சேர்ந்த சாமிதுரை (30) என்பவர், இனிமையாகப் பேசி மாணவியின் நம்பிக்கையைப் பெற்று, அவரது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரை வற்புறுத்தி பாலியல் உறவு கொண்டதும், அதனால் மாணவி கர்ப்பமானதும் தெரியவந்தது. இதையடுத்து, சாமிதுரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



AthibAn Tv