
கொரோனாவுக்கு மருந்து கண்டறியும் முயற்சியில் அமெரிக்காவின் ரெபானா (Refana) நிறுவனத்துடன் டில்லியை தலைமையிடமாக கொண்ட பனசியா பயோடெக் (Panacea Biotec) என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர். கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. உலக ஆராய்ச்சியாளர்கள் 6 மாதத்திற்கும் மேலாக தடுப்பு மருந்துக்கான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் பல தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு, பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையில் கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் எந்த மருந்தும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. அனைத்தும் பரிசோதனை நிலையிலேயே உள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது கொரோனா பாதித்தவர்களுக்கு ரெம்டெசிவிர் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் பரிசோதனை முயற்சியாக சில மருந்துகளின் கூட்டு கலவையை நோயாளிகளுக்கு செலுத்தும் ஆய்வுகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டறியும் முயற்சியில் அமெரிக்க நிறுவனத்துடன் இந்திய நிறுவனம் கைகோர்த்துள்ளது. அமெரிக்காவின் ரெபானா (Refana) நிறுவனத்துடன் டில்லியை தலைமையிடமாக கொண்ட பனசியா பயோடெக் (Panacea Biotec) என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
பனசியா நிறுவனம் மருந்தை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கான அனுமதியையும் பெற்றுள்ளது. அதேபோல, அமெரிக்காவில் மருந்து விற்பனையை ரெபானா கவனித்துக்கொள்ளும். இது குறித்து பனசியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ராஜேஷ் ஜெயின் கூறுகையில், ‛உலகம் தற்போது பாதுகாப்பான மருந்து ஒன்றை எதிர்நோக்கியுள்ளது. ரெபானா உடன் கூட்டணி அமைந்துள்ள நிலையில், 500 மில்லியன் மருந்துகளை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,‛ என்றார். இந்த பனசியா நிறுவனம், ஏற்கனவே டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


AthibAn Tv