
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், பிரதமர் நிவாரண நிதியை காங்கிரஸ் தலைமை தவறாக பயன்படுத்தியதாக பா.ஜ.க தலைவர் நட்டா குற்றம்சாட்டிய நிலையில், அதேகாலகட்டத்தில், ராஜிவ் சமகால கல்வி மையத்திற்கு, 7 மத்திய அமைச்சகங்கள் மற்றும் 11 பொதுத்துறை நிறுவனங்களும் நன்கொடை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஒரு ஆங்கில டிவி சேனலுக்கு கிடைத்த ஆவணங்களில், மனித வளத்துறை, உள்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, சுகாதாரத்துறை ஆகிய அமைச்சகங்கள் நன்கொடை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
அதேபோல் எல்ஐசி, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா(எஸ்ஏஐஎல்), கெயில் இந்தியா நிறுவனம், ஓஐஎல்( ஆயில் இந்தியா லிமிடெட்), ஓரியன்டல் வங்கி, எஸ்பிஐ வங்கி, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, ஹவுசிங் மற்றும் அர்பன் டெவலப்மென்ட் கார்பரேசன் கழகம்(ஹட்கோ), ஓஎன்ஜிசி உள்ளிட்ட 11 பொதுத்துறை நிறுவனங்களும் நன்கொடை அளித்துள்ளது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி மறுக்காத நிலையில், எவ்வளவு பணம், ராஜிவ் சமகால கல்வி மையத்திற்கு கொடுக்கப்பட்டது என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பிட்ரா கூறுகையில், ராஜிவ் சமகால மையத்திற்கு திருப்பிவிடப்பட்ட நிதி குறித்து ஏன் ஆய்வு செய்யப்படவில்லை. 3 வருடங்களாக ஆடிட்டர் மாற்றப்படாதது ஏன்? அந்த மையத்தின் ஆடிட்டராக இருந்த ரமேஷ் தாகூருக்கு காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கியதுடன், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மற்றும் ம.பி., மாநிலங்களின் கவர்னராக நியமித்தது. பார்லிமென்ட் விவகாரத்துறை உள்ளிட்ட பல அமைச்சக பொறுப்புகளும் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தெளிவாக விளக்க வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக, பா.ஜ., தலைவர் நட்டா டுவிட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில், பிரதமர் தேசிய நிவாரண நிதி என்பது நாடு முழுவதும் பேரிடர்களை சந்திக்கும் மக்களுக்கானது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இதிலிருந்து ராஜிவ் அறக்கட்டளை(ஆர்ஜிஎப்)க்கு நன்கொடை வழங்கப்பட்டது. பிரதமர் தேசிய நிவாரண நிதி வாரியத்தில் தலைவராக இருந்தது யார்? சோனியா, ராஜிவ் அறக்கட்டளையின் தலைமை பதவியில் இருந்தது யார்? சோனியா தான். எந்தவித அறிவுணர்வும் இல்லாமல், வெளிப்படை தன்மை இல்லாமல் இதன் நடைமுறைகள் இருந்துள்ளன என தெரிவித்திருந்தார்.


AthibAn Tv