
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில், வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களின் உயர்ந்த தியாகத்திற்கு தலை வணங்குகிறேன் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
இந்தியாவில், லடாக்கின் கல்வான் பகுதியில், ஐந்து வாரங்களாக, இந்திய - சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழியத் தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற சீன ராணுவத்துக்கு, நம் ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதல்களில், 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்தில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: நம்நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க, உயிர்தியாகம் செய்து வீர மரணம் அடைந்த தளபதி, ராணுவ வீரர்களின் உயிர்தியாகத்திற்கு தலை வணங்குகிறேன். கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த அனைவரும் நம் நாட்டின் மரபு, ராணுவ வலிமையை உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


AthibAn Tv