
'' உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்ததால், 85 ஆயிரம் பேர் உயிர் பிழைத்துள்ளனர்,'' என, பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
பிரதமர் மோடி, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், 'ஆத்ம நிர்பார் ரோஜ்ஹர் அபியான்' திட்டத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, உத்தர பிரதேச தலைநகர், லக்னோவில் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:யோகி ஆதித்யநாத் அரசு, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்து வருகிறது. உத்தர பிரதேசத்தில், 24 கோடி மக்கள் உள்ளனர்.
இது, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் மொத்த மக்கள் தொகையாகும். ஆனால், அந்நாடு களில், கொரோனாவால், 1.30 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். அனைத்து வசதிகளும் உள்ள அமெரிக்காவில், பலி, 1.25 லட்சத்தை தாண்டியுள்ளது. யோகி ஆதித்யநாத் மற்றும் அரசு அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால், பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, உத்தர பிரதேசத்தில், 85 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பர். உத்தர பிரதேச அரசின் கடுமையான உழைப்பால், அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு
இதில், சிறப்பு ரயில்கள் மூலம்,வெளி மாநிலங்களில் இருந்து, 30 - 35 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள், உத்தர பிரதேசம் வந்த நிலையில் நடைபெற்றது தான், சாதனையாகும்.யோகி ஆதித்யநாத், தன் தந்தையின் ஈமச் சடங்கில் கூட கலந்து கொள்ளாமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், இது சாத்தியமாயிற்று.எந்த பிரச்னையையும் துணிந்து எதிர்கொள்வோர் வெற்றி பெறுவர்.இதில், உ.பி., உலகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த வகையில், கொரோனா தாக்குதலை, உத்தர பிரதேச அரசு மிகச்சிறந்த வாய்ப்க பயன்படுத்தியுள்ளது. இது, 2017க்கு முன், உத்தர பிரதேசம் ஆண்ட அரசுகளிடம் பார்த்திராதது.இவ்வாறு, அவர் பேசினார்.


AthibAn Tv