
'அமெரிக்காவில் தற்போதுவரை, குறைந்தது இரண்டு கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்' என, அமெரிக்காவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 24.7 லட்சத்தைக் கடந்துள்ளது; 1.26 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பின் புதிய மதிப்பீட்டின்படி, 'அமெரிக்காவில் குறைந்தது இரண்டு கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்' எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலுள்ள மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு, புதிய உச்சத்தை அடைந்து வருவது கவலையளிக்கிறது.
'வரும் அக்டோபர் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.80 லட்சமாக அதிகரிக்க கூடும்' என, வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 'ஒருவேளை 95 சதவீத அமெரிக்கர்கள் முகக்கவசங்களை அணியும் பட்சத்தில், இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை 1.46 லட்சமாக கட்டுப்படுத்த முடியும்' என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அமெரிக்க மக்கள் அனைவரும், முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சுகாதாரத்துறையே, இரண்டு கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


AthibAn Tv