முதல்வர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு: சென்னையில் இன்று தொடக்கம்!
சென்னை: தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கான இரண்டு நாள் மாநாடு சென்னையில் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் டி.ஜி.பி., எஸ்.பி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மூன்று அமர்வுகளாக நடக்கும் ஆய்வுக் கூட்டம்
முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் இந்த மாநாடு மூன்று முக்கிய அமர்வுகளாகப் பிரித்து நடத்தப்படவுள்ளது.
முதல் அமர்வு (சட்டம் - ஒழுங்கு & பெண்கள் பாதுகாப்பு): கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இணைந்து பங்கேற்கும் இந்த அமர்வில், சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் போலீஸ் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. குறிப்பாக, உளவுத் தகவல்கள் சேகரிப்பு, ரவுடிகள் மற்றும் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மீதான நடவடிக்கைகள், சாதிப் பிரச்சினைகளைக் கையாளுதல் ஆகியவை விவாதிக்கப்படவுள்ளன.
இரண்டாம் அமர்வு (அரசுத் திட்டங்கள்): இதில் மாவட்ட கலெக்டர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். அனைத்து அரசுத் துறைகளின் பயன்களும் மக்களுக்குச் சரியாகச் சென்றடைந்துள்ளதா, அதில் உள்ள நடைமுறைத் தடங்கல்கள் என்னென்ன என்பது குறித்து இந்த அமர்வில் விரிவாக ஆய்வு செய்யப்படவுள்ளது.
மூன்றாம் அமர்வு (வனத்துறை): இறுதி அமர்வில் கலெக்டர்கள் மற்றும் ஐ.எப்.எஸ். (IFS) அதிகாரிகள் இணைந்து வனத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
போதை இல்லாத தமிழகம் மற்றும் 'சிங்கப்பெண்' படை
மாநாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பெண்களுக்கு எதிராக நடக்கும் நகை பறிப்பு சம்பவங்களைத் தடுத்தல், 'சிங்கப்பெண்' அதிரடிப்படையின் செயல்பாடுகள், போக்சோ (POCSO) வழக்குகளின் தற்போதைய நிலை மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அத்துடன், "போதைப்பொருள் இல்லாத தமிழகம்" என்ற இலக்கை எட்டும் நோக்கில், கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கள்ளச்சாராயத்தை ஒடுக்குவது மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையைத் தடுப்பது குறித்தும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளன.
தலைமச் செயலாளர் முன்னிலையில் முன்னேற்பாடுகள்
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் விஜய் சிறப்புரையாற்றுகிறார். அப்போது சிறப்பாகச் செயலாற்றிய கலெக்டர்கள், போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளைப் பாராட்டி அவர் பரிசுகளை வழங்கவுள்ளார். இதற்கிடையே, இந்த மாநாட்டிற்கான விரிவான முன்னேற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலாளர் மு. சாய்குமார் தலைமையில் கலெக்டர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டன.


AthibAn Tv