Type Here to Get Search Results !

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்கள் தியானம்.... பாதுகாப்பு வளையத்திற்குள் கன்யாகுமரி

 கன்யாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்கள் தியானம் செய்கிறார்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் இறுதிக்கட்டமான 7ம் கட்ட தேர்தல் வரும் 1ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் 4ம் தேதி வெளியாகிறது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி.

கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு தேர்தல் முடிந்ததும் அவர் தியானம் செய்தார். 2014ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள பிரதாப்கர்கோட்டிலும், 2019ல் இமயமலையில் உள்ள கேதார்நாத் குகையிலும் தியானம் செய்தார். அதேபோல் தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் தியானம் செய்ய முடிவு செய்துள்ளார்.

அதற்கு அவர் இந்த முறை தமிழகத்தை தேர்வு செய்துள்ளார். குறிப்பாக, அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளும் முன் சுவாமி விவேகானந்தர் தவமிருந்து ஞானம் பெற்றதாகக் கூறப்படும் கன்யாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை தியானத்துக்கு ஏற்ற இடமாக பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.

இதற்காக அவர் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வருகிறார். 3.55 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 4.35 மணிக்கு கன்யாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடில் இறங்குகிறார். அங்கிருந்து காரில் மாலை 5.15 மணிக்கு கன்யாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்.

அதன்பின், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு முனையத்துக்குச் சென்று, தனிப் படகு மூலம் நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் செல்கிறார். விவேகானந்தரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்த பின், தியான மண்டபத்துக்குச் சென்று மாலை 6 மணிக்கு தியானத்தைத் தொடங்குகிறார். அங்கு 3 நாட்கள் தங்கி தியானம் செய்ய உள்ளார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1ம் தேதி மாலை 3 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

3 நாட்கள் தியானத்துக்குப் பிறகு, பிரதமர் மோடி மதியம் 1-ந்தேதி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து தனியார் படகில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து காரில் ஏறி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடுக்கு வருகிறார். பின்னர் மாலை 3.25 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். மாலை 4.05 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் அவர், மாலை 4.10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இரவு 7.30 மணிக்கு டெல்லி சென்றடைகிறார். விவேகானந்தர் தியானம் செய்த பாறையில் பிரதமர் மோடி 3 நாள் தியானம் செய்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி புகார்

இதனிடையே கன்யாகுமரியில் பிரதமர் மோடி மேற்கொண்ட தியானம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான ரன்தீப் சுர்ஜேவாலா, அபிஷேக் சிங்வி மற்றும் சையத் நாசர் உசேன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் நேற்று நேரில் புகார் அளித்தனர்.

திமுக மனு

இதேபோல் திமுக கன்யாகுமரி மேற்கு மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஸ்ரீதரிடம் மனு அளித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்

அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள புகாரில், தேர்தல் நடத்தை விதிகளின்படி, ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன் கடைபிடிக்க வேண்டிய அமைதிக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ஒலிபரப்பவும், ஒலிபரப்பவும் தடை விதிக்க வேண்டும்.

பாதுகாப்பு வளையத்திற்குள் கன்யாகுமரி

இதனிடையே பிரதமர் மோடி வருகையையொட்டி கன்யாகுமரி முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவர் வரும், செல்லும் அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விவேகானந்தர் மண்டபம் பகுதியில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடல் பகுதிகளில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் முதல் கடலோர காவல் படை படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சென்னையில் இருந்து ஏராளமான படகுகள் மற்றும் கடலோர காவல்படை வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடலோர கிராமப் பகுதிகளும் பலத்த போலீஸ் கண்காணிப்பில் உள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.