
'கொரோனா தடுப்பு மருந்து பற்றி விளம்பரம் செய்ய வேண்டாம்; அது பற்றிய விபரங்களை உடன் தெரிவியுங்கள் ' என, யோகா குரு, ராம்தேவின், 'பதஞ்சலி' நிறுவனத்துக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
யோகா குரு, ராம்தேவின், பதஞ்சலி நிறுவனம், பல்வேறு ஆயுர்வேத பொருட்களையும், வீட்டு உபயோகப் பொருட்களையும் தயாரித்து வருகிறது.உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள பதஞ்சலி நிறுவனம், 'கொரோனில் மற்றும் ஸ்வாசரி' என்ற பெயரில் மருந்து ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பதஞ்சலி அறிமுகப்படுத்திய கொரோனா தடுப்பு மருந்து பற்றிய விபரங்கள் தெரியவில்லை. அதில், இடம் பெற்றுள்ள மூலிகைககளின் விபரங்களும் தெரியவில்லை.
இது பற்றி, ஆயுஷ் அமைச்சகத்திடம் தெரிவிக்க, பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மருந்து, எந்த மருத்துவமனையில், எந்த நோயாளிக்கு வழங்கி ஆய்வு செய்யப்பட்டது என்ற விபரத்தையும் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறும் வரையில், மருந்து பற்றி விளம்பரம் செய்ய கூடாது என, பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


AthibAn Tv