கொரோனா சிகிச்சையில் பயன்படும் ஃபேவிஃபிராவிர் மருந்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா சிகிச்சைக்காக மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகள் குறித்து ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா சிகிச்சைக்கு ஃபேவிஃபிராவிர் என்ற மருந்தின் மூலம் நல்ல பலன் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இம்மருந்தினை மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது. ஃபேபி ப்ளூ என்ற பெயரில் தயாரிக்க உள்ளது.
ஃபேபிஃபிராவிர் மருந்தினை நோயாளிக்கு முதல் நாளில் 1800 மி.கி., அடுத்த 13 நாட்களுக்கு தினமும் 800 மி.கி., கொடுத்தால் போதும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனை நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுடன் இருக்கும் நோயாளிகளுக்கும் கொடுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இம்மருந்து குறித்து கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனத்தின் தலைவர் கிளென் சல்தானா கூறுகையில், ' இந்தியாவில் தற்போது நிலவும் இக்கட்டான சூழலில் மருந்திற்கு அனுமதி கிடைத்திருப்பது ஆறுதலான விஷயம். இம்மருந்தினை வழங்குவதன் மூலம் நான்கு நாட்களில் நோயாளியிடம் நல்ல முன்னேற்றத்தினை காண முடியும். லேசான மிதமான பாதிப்பு உள்ளவர்களிடம் 88 சதவீதம் வரை வெற்றி கிடைக்கும். இது வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து என்பதால் சிகிச்சை முறையும் எளிதானது. நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு இம் மருந்தினை விரைவாக கொண்டு சேர்க்க அரசுடன் கிளென்மார்க் நிறுவனம் இணைந்து செயல்படும் இவ்வாறு அவர் கூறினார்.
ஜப்பான் நாட்டில் உள்ள ஃபியூஜிஃபிலிம்ஸ் ஹோல்டிங் நிறுவனமும் 'அவிகான்' என்ற பெயரில் ஃபேபிஃபிராவிர் மருந்தினை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது


AthibAn Tv