
இந்தியா - சீனா மோதலுக்கு பின், மோடியைக் கடுமையாக விமர்சித்து வருகிறது, காங்கிரஸ். சோனியாவும், ராகுலும் தினமும் அறிக்கை வெளியிட்டு, பிரதமரை கேள்வி கேட்டு வருகின்றனர்.
மக்கள் மத்தியில் மோடியின் மதிப்பை குறைக்க, இதுதான் நல்ல சமயம் என, காங்கிரஸ் கருதுகிறது. அதற்கு ஏற்ப, 'சரியாக செயல்படாமல், இந்திய எல்லைப் பகுதியை சீனாவிற்கு விட்டுக் கொடுத்து விட்டார் மோடி' என, ராகுல் சொல்லி வருகிறார். அனைத்து கட்சி கூட்டத்தில், சோனியாவும் மோடியை விமர்சித்து உள்ளார். ஏறக்குறைய அனைத்து எதிர்க்கட்சிகளும் சீனாவை கண்டனம் செய்துள்ளன. ஆனால், காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும், இந்த விஷயத்தில் அடக்கி வாசித்து வருகின்றன.
சீனாவை அதிகம் காங்கிரஸ் சாடாமல் இருக்க காரணம் உள்ளது என்கின்றனர், பா.ஜ.க வினர். 'காங்கிரசும், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும், 2008, ஆகஸ்டில், ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. இரு கட்சி களும் கருத்து பரிமாற்றம், ஒத்துழைப்பு என, இந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டு உள்ளது' என்கின்றனர், பா.ஜ.க வினர். அந்த சமயத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 'இந்த ஒப்பந்தத்தில், காங்கிரஸ் தரப்பிலிருந்து கையெழுத்திட்டது, ராகுல்; சீனா கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கையெழுத்திட்டது, ஜி ஜின்பிங். இப்போது இவர்தான் சீனாவின் அதிபர்.
இதனால் தான், சீனாவிற்கு எதிராக பேசாமல், காங்., அடக்கி வாசிக்கிறது' என்கின்றனர், பா.ஜ.க கட்சியினர். ஆனால், இதற்கும் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. '12 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, தங்களுடைய தவறை, பா.ஜ.க மறைக்கப் பார்க்கிறது' என, காங்கிரஸ் கூறுகிறது.


AthibAn Tv