Type Here to Get Search Results !

விரைவில் விற்பனைக்கு உள்ள பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பிட முடிவு

Made In China High-Res Vector Graphic - Getty Images

அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், விரைவில் தங்களது தளத்தில் விற்பனைக்கு உள்ள பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பிட முடிவு செய்துள்ளன.

லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா இடையேயான மோதலில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனாவில் அத்துமீறலை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்கும் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை சுவிகி, பிக்பேஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தயாரிப்பு பட்டியல் குறித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியது. ரிலையன்ஸ் ஸ்டோர், டாடா கிளிக் மற்றும் ஜியோ தயாரிப்பு தளங்களும் தயாரிப்பு நாடுகளின் பட்டியலை வெளியிட ஒப்புதல் தெரிவித்துள்ளன.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் 15 நாட்களுக்குள் அரசு அதிகாரிகளிடம் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளன. இதுபோன்று பொருட்களில் தயாரிப்பு நாடுகளின் பெயரை குறிப்பிட்டால், சீன பொருட்களின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் பொருட்களின் மீது நாடுகளின் பெயரை குறிப்பிடுவது மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு வலுசேர்ப்பதாக அமையும். கடைகளில் உள்ள அமைப்பில், பொருட்களை எடுத்து பார்த்து எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை நுகர்வோர் அறிந்து கொண்டு, வாங்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதை போல, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் தங்களது தளங்களில் விவரங்களை தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்பு, மக்கள்தொகை மற்றும் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மத்திய அரசின் ஆத்ம நிர்பார் பாரத் அல்லது சுயசார்பு இந்தியா கொள்கைக்கு ஏற்ப இந்நடவடிக்கை அமைந்துள்ளது. உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்பதற்கும் அவற்றை உலகளாவியதாக்குவதற்கும் இதுவே நேரம் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

சமீபத்தில் மத்திய அரசு, அரசு அலுவலகங்களுக்காக கொள்முதல் செய்யும் பொருட்களின் தயாரிப்பு உள்ளிட்ட மூல தகவல்களை கட்டாயம் இடம்பெற செய்ய வேண்டுமென விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. 4-ஜி இணையசேவை அமைப்பதற்கு சீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டாமென பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் அரசு உத்தரவிட்டிருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.