
மத்திய பிரதேசத்தில் டீக்கடை நடத்தி வருபவரின் மகள் அஞ்சல் கங்வால் விமானப்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த நீமுச் என்ற கிராமத்தில் 25 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருபவர் சுரேஷ் கங்வால். இவருடைய 24 வயது நிரம்பிய மகள் அஞ்சல் கங்வாலின் நீண்ட நாளைய கனவு தற்போது நனவாகி உள்ளது. அவர் இந்திய விமானப்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம் அவர் கனவு நனவானது.
2013ல் கேதார்நாத் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களின் துணிச்சலான நடவடிக்கைகளைப் பார்த்த அஞ்சல் கங்வாலுக்கு விமானப் படையில் சேர வேண்டும் என்ற விருப்பம் வந்தது. ஆனால், வறுமையின் காரணமாக அவர் விமானப்படையில் சேர்வது எளிதான காரியம் இல்லை என்றாலும் விடாமுயற்சியுடன் இருந்ததால் தான் விமானப்படை அதிகாரியாகி உள்ளதாக பெருமிதத்துடன் கூறுகிறார் அஞ்சல்.
இதனிடையே மத்திய பிரதேசம் முதல்வர் சஞ்சய் சவுகான், ' நீமுச்சில் உள்ள டீக்கடைக் காரர் சுரேஷ் கங்வாலின் மகள், அஞ்சல் கங்வால், விமானப்படையில் சேர்ந்து போர் விமானங்களை இயக்கி நம் நாட்டிற்கு பெருமையும் கவுரவத்தையும் காக்க உள்ளார்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அஞ்சல் கங்வால் படிப்பிலும், கூடைப்பந்து விளையாட்டிலும் சிறந்தவராக உள்ளார். விடாமுயற்சியும் ஆர்வமும் இருந்தால் ஏழ்மை ஒரு தடை இல்லை என்பதை அஞ்சல் கங்வால் நிரூபித்துள்ளார்.


AthibAn Tv