
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த சமூக விரோத மற்றும் ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக நாங்கள் பழிவாங்குவோம் என மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றிக்கு அரசியல் கட்சிகளின் 'கோஷங்கள்' ஒரு முக்கிய காரணியாக இருக்கும். அந்த வகையில், மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., ஆட்சியை அகற்ற, 2011ம் ஆண்டு தேர்தலில் ‛பழிவாங்கல் இல்லாத ஆட்சி மாற்றம்' என்ற கோஷத்தை, மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., கட்சி முன்வைத்தது. அதன்படியே ஆட்சியையும் கைப்பற்றினார். இந்நிலையில், தற்போது மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற பாஜ.,வும் புதிய கோஷத்தை முன் வைத்துள்ளது. அதாவது, ‛ஆட்சியை மாற்றுவோம், பழி வாங்குவோம்' என்ற கோஷத்தை அம்மாநில பாஜ., தலைவர் திலீப் கோஷ் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: பழிவாங்கல் இருக்காது எனக்கூறி, திரிணமுல் காங்., ஆட்சிக்கு வந்தது. ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளில், அவர்கள் செய்தது எதிர்க்கட்சிக்கு எதிரான பழிவாங்கல் அரசியலை மட்டுமே பின்பற்றியது. கடந்த சில ஆண்டுகளில் எங்கள் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த சமூக விரோத மற்றும் ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக நாங்கள் பழிவாங்குவோம். இல்லையெனில், மக்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு திலீப் கோஷ் கூறினார்


AthibAn Tv