
டில்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, அதை கட்டுப்படுத்துவது குறித்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆகியோருடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று ஆலோசனை நடத்த
உள்ளார்.
படுக்கை வசதி இல்லை
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இங்கு, 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 1,200க்கும் அதிகமானோர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் கெஜ்ரிவால், டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆகியோருடன், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, இன்று ஆலோசனை
நடத்தவுள்ளார்.மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனும் இந்த ஆலோசனையில் பங்கேற்கவுள்ளார். இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:நாட்டிலேயே, மஹாராஷ்டிரா, தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக டில்லியில் தான் அதிக பாதிப்பு உள்ளது.
மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லை என்றும் பலரும் தெரிவிக்கின்றனர். கொரோனா நோயாளிகள் மோசமாக நடத்தப்படுவதாக உச்ச நீதி
மன்றமும் தெரிவித்துஉள்ளது. இதையடுத்து, உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, டில்லி முதல்வர், கவர்னருடன், மத்திய உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்ததவுள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்காலிக மருத்துவமனை
கொரோனா தொடர்பான ஒரு வழக்கை நேற்று விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், 'கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைகளில் படுக்கை
வசதியை அதிகரிக்க வேண்டும். 'செயற்கை சுவாசம் அளிக்கும் கருவிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்' என, டில்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.பல்வேறு தரப்பினரிடமிருந்தும் புகார்கள் வருவதை அடுத்து, டில்லியில், 10 ஆயிரம் படுக்கைகள் உடைய தற்காலிக மருத்துவமனையை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மாநில அரசு இறங்கியுள்ளது. கூடாரங்களை அமைத்து, அவற்றில் படுக்கை வசதி, செயற்கை சுவாச கருவி ஆகியவற்றை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


AthibAn Tv