
'கொரோனா' வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ள டில்லியில், நிலைமையை சமாளிக்க, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், போதிய டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர் இல்லாததால், சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. இங்கு, 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 27 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாளுக்கு நாள் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், படுக்கை வசதிகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெரிய ஓட்டல்கள், அரங்குகள் ஆகியவை, கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.இந்நிலையில், டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாவது:டில்லியில் மட்டும், 2,000க்கும் மேற்பட்ட டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு, வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்போர், தனிமைப்படுத்தப் படுகின்றனர். அதனால், மருத்துவப் பணியாளர்களை, கொரோனா பணிக்கு அனுப்ப குடும்பத்தார் தயங்குகின்றனர்.டில்லி இதய மற்றும் நுரையீரல் மையத்தில், ஏற்கனவே, 25 சதவீத நர்சுகள் பணிக்கு வரவில்லை.
தற்போது, அதை, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியதால், மேலும், 15 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை.அதனால், படுக்கை வசதிகளை அதிகரித்தாலும், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையால், உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.


AthibAn Tv