
அமெரிக்காவில் கருப்பினர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி டெரெக் சாவினுக்கு ஜாமின் வழங்க ரூ.7.5 கோடியை பிணைத் தொகையாக நீதிபதி நிர்ணயித்துள்ளார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகர் மின்னபொலிசில், மே 25ல் ஜார்ஜ் பிளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் தங்கள் உணவகத்திற்கு வந்து போலி ரசீதுகளை கொடுத்து சிகரெட் வாங்கியதாகவும், அதனை திருப்பி தரவில்லை என்றும் போலீசுக்கு புகார் வந்தது. இது தொடர்பாக விசாரிக்க அழைத்த போது பிளாய்ட் போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்தார். அவரை போலீஸ் அதிகாரி டெரெக் சாவின் உட்பட நால்வர் சேர்ந்து தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினர். என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள் என பிளாய்ட் கெஞ்சிய போதும் விடவில்லை. சிறிது நேரத்தில் பிளாய்ட் உயிரிழந்தார்.
இந்த வீடியோக்கள் வெளியாகி அமெரிக்கா முழுவதும் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான டெரெக் சாவின், மினசோட்டா மாகாண சிறையிலிருந்து வீடியோ மூலம் முதல் கோர்ட் விசாரணையில் பங்கேற்றார். இவர் ஏற்கனவே 3 என்கவுன்டரில் பங்கேற்றவர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் ஹென்னெபின் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்க ரூ.7.5 கோடி பிணைத்தொகையும், நிபந்தனையற்ற ஜாமின் வழங்க ரூ.9.4 கோடி பிணைத்தொகையும் நிர்ணயித்து வழக்கை ஜூன் 29-க்கு ஒத்திவைத்தது. பிளாய்ட் கைதின் போது சாவினுடன் இருந்த மற்ற மூன்று அதிகாரிகளும் கொலைக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ளனர்.


AthibAn Tv