
70 ஆண்டுகால வாக்குறுதிகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு, விரலசைவில் சாதித்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஜன்சம்வாத் மெய்நிகர் பேரணியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியே பிரதானம் என்ற செய்தியை நம் அரசு தெளிவாக தெரிவித்து விட்டது. இதில் வெற்றியும் அடைந்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் நம் முயற்சி அதன் முகத்தை மாற்றுவது, அதாவது இந்த மாற்றத்தைப் பார்த்து பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மக்கள் பொறாமையடைய வேண்டும். நாமும் இந்தியாவின் பகுதியாக இருந்தால் நம் தலைவிதியும் மாறியிருக்குமே என்று அவர்கள் விரும்பத் தொடங்குவார்கள். பாகிஸ்தான் ஆக்ரமிப்பிலிருந்து தாங்கள் விடுதலை பெற அவர்கள் கோரிக்கை வைப்பார்கள். இது நடக்கும் போது நாடாளுமன்ற தீர்மானம் நிறைவடையும்.
நாட்டின் கறையாக இருந்த ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370ம் பிரிவு மோடியின் தைரியத்தினால் நீக்கப்பட்டது. முன்பெல்லாம் காஷ்மீரில் போராட்டங்களின் போது பாகிஸ்தான் கொடி அல்லது ஐஎஸ் பயங்கரவாத இயக்க கொடிகள் அங்கு பறக்கும். ஆனால் இப்போது மூவர்ணக்கொடி பறக்கிறது. இந்தியாவின் முடிவை முஸ்லிம் நாடுகளே ஆதரிக்கின்றன. இதன் மூலம் உலக தரநிலையில் இந்தியாவின் மதிப்பு கூடியுள்ளது. மலேசியா, துருக்கி போன்ற நாடுகள்தான் 370 நீக்க முடிவை ஆதரிக்கவில்லை.
முன்பெல்லாம் வளர்ச்சிக்கான நிதி ஊழலில் மறைந்து போனது, பிரிவினை வாதிகளிடம் போனது, பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசும் அரசியல் சக்திகள் கைக்கு சென்றது. ஆனால் 370ம் பிரிவு நீக்கம் என்பது அவர்களின் முதுகெலும்பை உடைத்தது. 2014-19 வரை காஷ்மீரில் வளர்ச்சிக்காக இந்திய அரசு ரூ.2 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. 70 ஆண்டுகால வாக்குறுதிகளை மோடி அரசு விரலசைவில் சாதித்து வருகிறது. மக்களிடையே பாகுபாடு முடிந்து இந்தியாவுடன் முழுவதும் இணைந்துள்ளது. இந்திய அரசியல் டிஜிட்டல் உலகிற்குள் நுழைந்து விட்டது, அதனால்தான் நிறைய மெய்நிகர் பேரணிகள் நடைபெறுகிறது.
மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது, இந்தியாவின் மதிப்பு கூடியது. கொரோனா வைரஸ் தொற்றை கையாளும் விதம் குறித்து பலரும் விமர்சிக்கலாம்; ஆனால் உலகச் சுகாதார அமைப்பு போன்றவை நம்மைப் பாராட்டுகின்றன. ஊரடங்கு மட்டும் செய்யவில்லை எனில் நம் நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


AthibAn Tv