சீன நிறுவனங்களுடன் செய்திருந்த ரூ.2,900 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பீகார் அரசு ரத்து

Dina AthibAn
0
சீன நிறுவனங்களுடன் ரூ.2,900 கோடி ...

பீகார் தலைநகர் பாட்னாவில் பெரிய பாலம் கட்டுவதற்காக சீன நிறுவனங்களுடன் செய்திருந்த ரூ.2,900 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை அம்மாநில அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா, சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். இதனையடுத்து சீனப் பொருட்களை புறக்கணிக்குமாறு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் சிலரும் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். மஹாராஷ்டிரா அரசு, சீன நிறுவனங்களுடன் ரூ.5 ஆயிரம் கோடியில் செய்திருந்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் பீகாரில் பாலம் கட்ட இரு சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.2,900 கோடி ஒப்பந்தத்தை அம்மாநில அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. பாட்னாவில் கங்கை நதியின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை-19 இணைக்கும் வகையிலும் 4 வழிப்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இது ஒரு ரயில்வே மேம்பாலம், 4 சிறிய பாலங்கள், 13 சாலைகளை இணைக்கும் பாலம், பேருந்துகள் நிறுத்தும் 5 நிறுத்தங்கள் என மிகப்பெரிய திட்டமாகும். இந்த பாலம் ஏறக்குறைய 5.63 கி.மீ தொலைவு கொண்டதாக ரூ.2,900 கோடி திட்ட மதிப்பில் வடிவமைக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெண்டர் அடிப்படையில் இரு நிறுவனங்கள் இந்த திட்டத்துக்காக பீகார் அரசு தேர்வு செய்திருந்தது. அந்த இரு நிறுவனங்களும் சீன நிறுவனங்களுடன் கூட்டு வைத்து இந்த திட்டத்தை நடத்த முடிவு செய்ததால் இந்த ஒப்பந்தத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது.

இது குறித்து பீகார் மாநில சாலைப் போக்குவரத்து அமைச்சர் நந்த் கிஷோர் யாதவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: பாட்னாவில் கங்கை நிதியின் குறுக்கே 5 கி.மீ தொலைவுக்கு பாலம் கட்ட ரூ.2900 கோடி ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களுக்கு வழங்கி இருந்தோம். அந்த இரு நிறுவனங்களும் சீனாவின் ‛சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி', ‛ஷான்க்ஸி ரோட் பிரிட்ஜ் கம்பெனி' ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த இருந்தன. நாங்கள் இந்த இரு சீன நிறுவனங்கள் இல்லாமல் திட்டத்தை செயல்படுத்த கோரினோம். அதற்கு அந்த இரு நிறுவனங்களும் மறுத்ததால், ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளோம். மீண்டும் புதிதாக டெண்டர் விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!