
டில்லியில் கொரோனா வைரஸ் நோயாளிகள் 10,200 பேரை தங்க வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய கொரோனா மருத்துவமனையை இந்தோ - திபெத் எல்லை போலீஸின் மருத்துவ பணியாளர்களை கொண்டு உள்துறை அமைச்சகம் அமைத்து வருகிறது. ஒரு லட்சம் சதுர மீட்டரில் அமைய உள்ள இம்மருத்துவமனை சீனா அமைத்ததை விட 10 மடங்கு பெரியதாகும்.
தலைநகர் டில்லியில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2233 பேர் இறந்துள்ளனர். இதனால் தெற்கு டில்லியின் சத்தர்பூரில் உள்ள ராதா சோமி சத்சங் பியாஸ் வளாகத்தில் மிகப்பெரிய கொரோனா மையம் அமைத்துள்ளனர். இந்த இடம் சீக்கிய ஆன்மிக அறக்கட்டளைக்கு சொந்தமானது. இதனை இந்த வாரம் திறக்க உள்ளனர். 15 கால்பந்து மைதானம் அளவிலான இம்மையத்திற்கு சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையம் மற்றும் மருத்துவமனை என்று பெயரிடப்பட்டுள்ளது.
சீனாவின் லீஷென்ஷனில் 1,000 கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனையை காட்டிலும் இது 10 மடங்கு மிகப்பெரியது. இந்த வாரம் 2,000 படுக்கைகள் தயாராகிவிடும். அவற்றை வியாழனன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்று பார்வையிட உள்ளார். மீதமுள்ள படுக்கைகள் ஜூலை 3-க்குள் அமைக்க இலக்கு வைத்துள்ளனர். 10,200 படுக்கைகள் செயல்பட்டவுடன், 800 பொது மருத்துவர்கள் மற்றும் 70 சிறப்பு மருத்துவர்கள், சுமார் 1,400 செவிலியர்கள் தேவைப்படுவார்கள்.


AthibAn Tv