தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரப் புகார் வழக்கு: கைது நடவடிக்கைக்குப் பயந்து முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மனு!
சென்னை: சட்டப்பேரவைத் தலைவருக்கு (ஸ்பீக்கர்) எதிராகத் தீர்மானம் கொண்டுவரும் போது, அதற்கு ஆதரவாக வாக்களித்தால் 35 கோடி ரூபாய் தருவதாகக் கூறித் தன்னிடம் திமுகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜா காவல் துறையில் அதிரடிப் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீஸார், முதற்கட்டமாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தக் குதிரை பேர விவகாரத்தில் முக்கிய நபர்களாகக் கருதப்படும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு போலீஸார் ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தனர். இருப்பினும், இருவரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். இதனால் தங்களைக் காவல் துறையினர் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில், அசோக்குமார் முன்ஜாமீன் கோரி ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
கோவை தெற்கு தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்தும் தனி வழக்கு!
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தம்மைக் கைது செய்யாமல் இருக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிலும் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த முன்ஜாமீன் மனு, உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜிக்கு மேலும் ஒரு சட்டப் பூர்வ நெருக்கடியாக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.எம்.பாபு முருகவேல் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், "கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும்; மேலும், விதிமீறல்களுக்குத் துணைபோன அந்தத் தொகுதியின் தேர்தல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் வழக்கும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

AthibAn Tv