தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா ம.தி.மு.க.? - எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய அறிவுறுத்தல்; சீர்காழி எம்.எல்.ஏ. அதிரடி விலகல்!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், தற்போதைய தி.மு.க. கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.) வெளியேறி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க.) ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள ரகசியத் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
உதயசூரியன் சின்னமும், தற்போதைய அரசியல் சூழலும்
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பெற்றிருந்தது. அப்போது தொகுதிப் பங்கீட்டில் அக்கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டன. எனினும், தி.மு.க.வின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக, ம.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் தனிச் சின்னம் இன்றி, தி.மு.க.வின் 'உதயசூரியன்' சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் எனப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.
தேர்தல் முடிவுகளில் ம.தி.மு.க. இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் பெரும்பான்மையை நிரூபிக்கப் போராடிய 'தமிழக வெற்றிக் கழக' அரசுக்கு, தி.மு.க. கூட்டணியில் தத்தமது சொந்தச் சின்னங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், விசிக மற்றும் ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகள் ஆதரவளித்து அமைச்சரவையிலும் பங்கேற்றன.
மறுபுறம், ம.தி.மு.க.வினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால், சட்டப்படியான சிக்கல்களால் அவர்களால் த.வெ.க. அரசுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்க முடியாத இக்கட்டான சூழல் நிலவியது.
உயர்நிலைக் குழு கூட்டம்: எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவிற்கு அறிவுறுத்தல்?
இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து வைகோ தலைமையில் இன்று ம.தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் எதிர்கால வளர்ச்சி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இக்கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு, உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் விவரம் வருமாறு:
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ம.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரையும் தங்களது பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு உயர்நிலைக் குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பொதுக்குழுவில் தீர்மானம்: இன்று எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவுகள், நாளை (27.06.2026) சனிக்கிழமை நடைபெறும் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாகத் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளன.
வைகோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நாளை பிற்பகல் 3.30 மணி அளவில், தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. முற்றிலுமாக வெளியேறும் முடிவை வைகோ செய்தியாளர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"நான் இனி தி.மு.க. உறுப்பினர்" - சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் அதிரடி!
ம.தி.மு.க.வின் இந்த அதிரடி அரசியல் நகர்வுகளுக்கு இடையே, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன், தான் ம.தி.மு.க.விலிருந்து முற்றிலும் விலகிவிட்டதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில்:
"நான் ஏற்கனவே ம.தி.மு.க.வில் இருந்து விலகி, தற்போது தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக இணைந்து செயல்பட்டு வருகிறேன். எனவே, ம.தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூட்டத்திலோ அல்லது அவர்களின் கூட்டணி முடிவுகளிலோ நான் பங்கேற்க வேண்டிய அவசியம் எழவில்லை."
என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் இருந்த பிரதான கூட்டணிக் கட்சிகள் ஏற்கனவே விலகிவிட்ட நிலையில், தற்போது ம.தி.மு.க.வும் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறத் தயாராகி வருவது, தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட பரபரப்பான விவாதங்களைத் தூண்டியுள்ளது.



AthibAn Tv