ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தானியர்: இந்திய ராணுவம் அதிரடி கைது!
பூஞ்ச் (ஜம்மு காஷ்மீர்): ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில், இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை இந்திய ராணுவத்தினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். எல்லைப் பகுதியில் ராணுவத்தினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது இந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
ரோந்து பணியின் போது சிக்கிய ஊடுருவல்காரர்
பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பாலகோட் செக்டார் பகுதியில், இந்திய ராணுவத்தினர் வழக்கம்போல தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் எல்லையத் தாண்டி சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இந்தியப் பகுதிக்குள் நுழைவதை ராணுவத்தினர் கவனித்தனர். உடனடியாகச் செயல்பட்ட பாதுகாப்புப் படையினர், அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
தீவிர விசாரணை
கைது செய்யப்பட்ட நபரிடம் ராணுவ அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் பாகிஸ்தானின் பக்தூன் பகுதியைச் சேர்ந்த பாஜியா ஜடா கான் என்பவரின் மகன் ரயீஸ் கான் என்பது தெரியவந்துள்ளது.
அவர் எந்த நோக்கத்திற்காக இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்? இந்தியாவில் யாரையாவது சந்திப்பதற்காக வந்தாரா? அல்லது எல்லைப் பகுதியில் உளவு பார்க்கும் நோக்கில் வந்தாரா? என்பது குறித்தும், அவருக்கு ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் இந்திய ராணுவத்தினரும் பாதுகாப்புப் பிரிவினரும் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


AthibAn Tv