தமிழகம் தற்போது பெரிய பேரிடரில் சிக்கியுள்ளது: தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தஞ்சாவூர்: "தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள அரசின் தவறான கொள்கைகளால் ஒட்டுமொத்த மாநிலமும் பெரிய பேரிடரில் சிக்கிக்கொண்டுள்ளது" என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முக்கிய நிர்வாகியுமான உதயநிதி ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய அவரே இந்த விமர்சனங்களை எழுப்பினார்.
போலி பிம்பமும் மின்வெட்டுப் புகார்களும்
திருமண விழாவில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், "தமிழகத்தில் அமைந்துள்ள 'சோஃபா மாடல்' ஆட்சியின் போலி பிம்பம் கடந்த ஒரு மாதத்திலேயே உடைந்து நொறுங்கியுள்ளது. நாளுக்கு நாள் இந்த ஆட்சியின் அவலங்களை மக்கள் உணர்ந்து வருகின்றனர். தூய சக்தி என்று தங்களைச் சொல்லிக்கொண்டவர்கள், ஆட்சிக்கு வந்தவுடன் குதிரைப்பேரத்தைத் தொடங்கிவிட்டனர். தற்போது தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு, பொதுமக்கள் மின்சாரத்தைத் தேடி அலையும் அவலநிலை உருவாகியுள்ளது" என்று சாடினார்.
டெல்டா விவசாயிகளின் போராட்டம்
தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்துப் பேசுகையில், "கடந்த 2021 முதல் 2025 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை வழக்கம்போல ஜூன் 12-ம் தேதியே திறக்கப்பட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசு அணையைத் திறக்கத் தவறிவிட்டது. குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என விவசாயிகள் சாலைகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்களையும், விவசாயிகளையும் முதல்வர் கொச்சைப்படுத்திப் பேசி வருகிறார். ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு வெறும் 5,000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து, அதிலும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஏமாற்றியுள்ளனர்" எனக் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையின் தரம் குறித்து விமர்சனம்
மேலும், தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய செயல்பாடுகளை விமர்சித்த அவர், "ஆட்சியாளர்கள் சட்டப்பேரவையின் ஒழுங்கை படுகுழியில் தள்ளியுள்ளனர். நாம் இருப்பது சட்டப்பேரவையா, சினிமா தியேட்டரா அல்லது ஏதேனும் ஷூட்டிங் ஸ்பாட்டா என்று சந்தேகம் எழும் அளவுக்கு ஆளுங்கட்சியினர் அதன் தரத்தைக் குறைத்துவிட்டனர். இதேபோல், சென்னை பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது பிரதிநிதி எங்கே போனார் என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். எனவே, இந்த மோசமான பேரிடரில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டியது நமது பொறுப்பாகும். இதற்காக திமுகவினர் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்" என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் அரசின் தவறுகளைத் தட்டிக்கேட்கும் திமுகவினர் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து அரசு கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதால், இதை எதிர்கொள்ள திமுகவிற்கு கூடுதல் வழக்கறிஞர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.


AthibAn Tv