
பிகார் நேபாள எல்லையில் உள்ள கன்டாக் அணை கட்டுமானப் பணியை நேபாள அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
பிகார் மாநிலத்தில் இந்திய நேபாள எல்லை அருகே இந்தியாவுக்குள் அமைந்துள்ள கன்டாக் அணையின் கட்டுமான பணிகளை நிறுத்துமாறு நேபாள அதிகாரிகள் கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் ஓடும் லால் பேக்கியா நதியில் அமைந்துள்ள கன்டாக் அணையில் கட்டுமானப் பணிகளை பிகார் மாநில நீர்வளத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அதில் ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி நேபாள அதிகாரிகள் பணியை தடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பிகார் மாநில நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் ஷா கூறியதாவது, ' கன்டாக் அணை 36 மதகுகளை கொண்டது, அவற்றில் 18 மதகுகள் நேபாளத்தின் பகுதியில் அமைந்துள்ளது. அப்பகுதியில் இருந்து தான் கட்டுமானத்திற்கு தேவையான பொருளை பெற முடியும். ஆனால், அப்பகுதிக்கு செல்ல முடியாமல் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். நேபாளம் தடுக்கும் பகுதியில் வசிப்பிடம் எதுவும் கிடையாது. பல இடங்களில் அவர்கள் பணிகளை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அணை கட்டுமானப் பணியை தடுத்துள்ளதால் பிகார் மாநிலத்திற்கு வெள்ள அபாயம் உள்ளது. இது போல் பிரச்னை வருவது இது தான் முதல் முறை' இவ்வாறு அவர் கூறினார்
இப்பிரச்னை குறித்து மத்திய உள்த்துறை அமைச்சகத்திற்கும், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் பிகார் மாநில அரசு தகவல் அளித்துள்ளது. இந்திய பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்நாட்டு பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கிய சில நாட்களில் இந்தியா உடனான எல்லையில் பிரச்னையை ஏற்படுத்தும் நேபாளத்தின் திட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


AthibAn Tv